மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட பொலிஸ் தலைமையகத்திலும் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு பொலிஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தும் மக்களை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார்.
கட்சியும் தேர்தலும் இரண்டாம்பட்சம் தான்; அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நாம் தமிழர் கட்சியினர் இருப்போம் என்றும் அவர் உறுதி அளித்தார்.