தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச ரீதியில் நீதி தேடவேண்டிய தேவை இருப்பதால் அது தொடர்பில் ஈழத் தமிழ் புலம் பெயர் பிரமுகர்கள் ஒன்றுபட்டு கூட்டாக செயற்பட வேண்டிய தேவை இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கனடாவில் தெரிவித்துள்ளார்.
கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி, முடிக்குரிய சுதேசியக் குடிகள் விவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் ஜேமி பாடிஸ்டி, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பிரான்செஸ்கோ சோர்பரா ஆகியோருக்கும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்குமிடையிலான சந்திப்பு கடந்த வார இறுதியில் கனேடிய பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது “இலங்கையில் நடந்தது இனப் படுகொலை தான் என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதில் பின்னிற்கும் சர்வதேச அரங்கில், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் புரியப்பட்டது இனப்படுகொலையாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஈழத்தமிழர்களின் நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தும் வகையில் 2022.05.20 ஆம் திகதி கனேடிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு காரணமாக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதன்போது நன்றி தெரிவித்தார்.
மேலும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் உரையாடிய சிறிதரன் எம்.பி. , ஈழத்தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் சர்வதேச செயற்பாடுகளில் அமைச்சர் ஹரியின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் அவசியமென்று சுட்டிக்காட்டினார்.
அதேபோல், எதிர்காலத்தில் தமிழர் விவகாரங் களில் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் சிறிதரன் எம்.பி. இங்கு வலியுறுத்தியுள்ளார்.