சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது ஏராளமான சிறுவர்கள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னிச்சாமியாக வந்துள்ள பல சிறுவர்கள் அங்குள்ள வழிபாட்டு முறைகள் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதால் மகிழ்வுடன் சந்நிதானத்தில் வலம் வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் பதிவு மூலம் தினமும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் ஸ்பொட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கவும் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை குறைந்துள்ளதால் புல்மேடு, முக்குழி உள்ளிட்ட வனப்பாதைகள் வழியே ஏராளமான பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தரிசனத்துக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கையும் வெகுவாய் அதிகரித்து வருகிறது.
பலரும் முதல்முறையாக கன்னிச்சாமியாக வருபவர்கள் என்பதால் வழக்கமான கோயில் வழிபாடுகளை பார்த்த சிறுவர்களுக்கு இங்குள்ள பூஜை முறைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.