வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்ததால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்தது.
குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால் கனமழை பெய்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியதால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அதேநேரம் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் மலையடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டை மண் மூடியதில் அங்கிருந்த 7 பேர் உயிரோடு புதைந்து பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வர வேண்டும். இந்த சவாலான நேரத்தில் கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாகச் செயற்படும். தேவையான எந்த உதவிகளையும் வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றாக இணைந்து வென்று வருவோம் என பதிவிட்டுள்ளார்.