இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கன மழைபெய்துவருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், வடக்கில் பெய்த கன மழையினால் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில் மூழ்கியுள்ளது நந்திக்கடல் பெருக்கெடுத்துள்ளதால் சாரதிகள் அவதானமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 02.30 மணியளவில், இந்த அமைப்பு மட்டக்களப்பில் இருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் தென்கிழக்கில் நிலைகொண்டுள்ளது.
இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் பயணிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகங்களுடன் கனமாக இருக்கலாம்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.