மாவையின் இறுதிப் பதிலுக்காக காத்திருக்கும் தமிழரசுக் கட்சி!

Must read

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜாவின் தீர்மானம் தொடர்பில், அவரிடமிருந்து இறுதிப் பதிலொன்றை பெற்றுக்கொள்வதற்கான காத்திருப்பு நீடிப்பதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மாவை சேனாதிராஜா எழுத்துமூலமாக கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.

இருப்பினும் குறித்த காலப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருந்தமையால் மாவையின் கடிதம் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றே கட்சியின் நிர்வாகம் அறிவித்திருந்தது.

எனினும், தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி மாவை சேனாதிராஜாவுக்கு பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், தலைமைப்பதவியில் இருந்து மாவை சேனாதிராஜா விலகுவதாக அறிவித்துள்ள கடிதம் கிடைத்தது என்றும் அந்த முடிவில் தொடர்ந்தும் இருக்கின்றீர்கள் என்பதை பதினான்கு நாட்களுக்குள் அறிவிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போது வரையில் மாவை சேனாதிராஜா தரப்பிலிருந்து எவ்விதமான பதிலளிப்புக்களும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், நாளைய தினம் வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் கூடும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் சம்பந்தமாக ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article