சுவிஸ் வயோதிபப் பெண் மீது தாக்குதல் : 2 கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளை

Must read

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை இன்று புதன்கிழமை (20) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த நபர்கள், பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள், 1 1/4 பவுண் தங்க சங்கிலி மற்றும் 29,000 ரூபா இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .

இது பற்றி தெரியவருவதாவது

கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்ற குடியேறியுள்ளார். அங்கு அவர் தாதியாக பணியாற்றுவதோடு கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் தாதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்து வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று (20) அதிகாலை 12 மணியளவில் வீட்டின் குளியலறை பகுதியில் யன்னல் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் குறித்த பெண்ணை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த அலுமாரியை உடைத்து 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங் (இரண்டு கோடி 40 இலட்சம்) மற்றும் 1 1/4 பவுண் தங்க சங்கிலியும் 29,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தலைமையில சென்ற பொலிஸார், தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article