மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்து குழு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடியில் அதிகமானோர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர், இனிவரும் காலங்களில் அபிவிருத்தியானது மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தியாக இருக்க வேண்டுமே தவிர எந்தவகையிலும் அன்றாட வாழ்க்கைக்கு பாதகங்களை ஏற்படுத்தகூடிய அபிவிருத்தியாக இருக்கமுடியாது என்றும் அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தாலும் சில அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என்ற விமர்சனம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனவே உயர் அதிகாரிகளை கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் காலங்களிலும் விதிமுறைக்கு முரணாக மண் அகழ்வுக்ள் இடம்பெறுமாயின் இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்குமாறும் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.