கனடாவில் ஈழத் தமிழர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய குலத்துங்கம் மதிசூடி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
ஆண்டுக்கு ஒருமுறை காரைதீவு வந்து செல்கின்றவர். அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளைச் செய்தவர்.
அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மகன் இளங்கோ காதல் தோல்வி காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என்று சொல்லப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கனடாவில் விரக்தி, மன நிலை குழப்பம் ஆகியன அதிகரித்து வரும் நிலையில், கனடா அரசாங்கம், சிறுவர் மன நிலை மேம்படுத்தும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதுடன், பெருமளவிலான நிதியையும் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.